அவனை எனக்கும் கொஞ்சமாகத் தெரிந்திருந்தது. இங்கிருந்து மூன்றாவது அறை. இயற்பியல் படித்திருந்தான். இயற்பியலை இயற்பியல் என்று 'பிசிக்'காமல் சொல்பவன் நிச்சயம் வேலையில்லாதவனாகத்தான் இருக்க முடியும். என் கணிப்பு முழுக்கச் சரியானதாவென்று தெரியாது. ஆனாலும் குறைந்தபட்சம் படிப்பிற்குத் தகுந்த வேலையிலாவது அவனில்லை என்றே பார்த்தபோதெல்லாம் பட்டது.
அவன் துறை ஆட்கள் கொஞ்சம் பேரோடு பழகியதுண்டு. மிஸ்டு கால் முதற்கொண்டு நியூட்டன் மூன்றாம் விதியேவென வாழப் பிடித்தவர்கள்.
அவன் வேறுபட்டிருந்தான். அன்னியோன்யமற்றிருந்தான் என்றும் வைத்துக்கொள்ளலாம். இவ்விடத்திற்கேவுரிய புலம்பல்களுக்கும் புளகாங்கிதங்களுக்கும் அப்பாற்பட்டவனாகத் தெரிந்தான். இறந்து போன தந்தையென்பதாகவோ நோயிலிருக்கும் தாய் என்றோ இன்னும் கல்யாணமாகாத தங்கையென்றோ ஒன்றும் இருப்பதாய்த் தெரியவில்லை. இருந்தாலும் கூறியதில்லை. மற்றபடி எப்போதும் சிரிப்பான். எப்போதாவது சிகரெட் வாசமிருக்கும் அதில்.
நேற்று போலீஸ் விசாரணை நடந்தது. தூரத்து உறவென யாரோ ஒருவர் மட்டும் வந்திருந்தார். சம்பிரதாயம் முடியும் வரையில் இருந்தார். ஒன்று விட்ட அறையென்பதால் என்னிடமும் விசாரித்தார்கள். மற்றபடி பெரும்பாலும் அதே பதில் தான் இருந்தது எல்லாரிடமும். எதுவும் பேசியதில்லை என்பதாகவே. கைப்படக் கடிதம் எழுதி வைத்திருந்ததால் அவர்களுக்குச் சுலபமாகப் போய் விட்டது.
என்றோ நடந்தது அல்லது என்றும் எங்கேனும் நடக்கிறது. புதிதாய் ஏன் எழுதுகிறேன் என்பதாகப் படுகிறது உங்களுக்கு. அன்று கடிதத்தை அவன் ஒரு புத்தகத்தினுள் வைத்திருந்தான். அப்புத்தகத்தின் புதிய பதிப்பு வெளிவரும் பட்சத்தில் வாங்கலாம் என்றிருக்கிறேன். முற்றும்.
Comments
inthap pathivu!!